Sunday, October 08, 2006

தீ மூட்டும் ஞாபகங்கள்

ஊர் ஞாபகம் என்றால்
நீமட்டுமே என்பதாகிறது
இன்று வரையிலும்.

கருவேலங்காட்டிலிருந்து
வெட்டிவந்த
முள்ளு மிளறுகளை
கட்டுக்கட்டாக கட்டி
நீ அடுக்கி வைத்திருக்கும் அழகில்
படுத்துத் தூங்கியவன் நான்

கல்லாம்போத்து படித்துறையில்
நீ துணி துவைத்த அழகில்
வெளுத்தது
உன் மீதான என் காதல்

ஏரி வயக்காட்டில்
நண்டு பிடிக்கும்
உன் லாவக கிளுக்கியில்
சிக்கியவன் நான்

ஆம்பளைக்கு சமமாக
பனை ஏறி
இள நுங்கு சீவிக்கொடுத்த
உன்வாங்கு கத்தியின்
கூர்மைச் சுனை நான்

இரவானதும்
மின்விளக்கு வெளிச்சத்தில்
'வெயிலுக்கு வந்தேனே வெட்கமில்லையா'
'காயே கடுப்பங்காய் கஞ்சி ஊத்தி நெல்லிக்காய்'
விளையாடிய நம் விளையாட்டில்
விளையாட்டானது என் காதல்

உன் திருமணத்தன்று
'தப்பு மேளம்' கொட்டியதோடு
முடிந்துபோனது
ஊரில் நான் வாழ்ந்த வாழ்வு

என்றாலும்
ஊர் ஞாபகம் என்றால்
நீ மட்டுமே என்றாகிறது
இன்று வரையிலும்....

நன்றி: புதியபார்வை

Wednesday, October 04, 2006

ஒத்திகை

ஏரி களிமண் உருட்டி
உனக்குச் செய்துகொடுத்த
விளையட்டுச் சாமான்கள்
உன் சீதனத்தின் ஒத்திகை.

கொரக்கா தட்டை ஒடித்து
செய்து கொடுத்த பீப்பீகளின் ஒலி
உன் திருமண கெட்டிமேள
நாதஸ்வரத்தின் ஒத்திகை.

பூவரசம் பூ பறித்து
மோதிரம் செய்து
உன் விரலுக்கு அணிந்தது
உன் திருமண பரிசின் ஒத்திகை.

மண் வீடு கட்டி
அப்பா அம்மா விளையாட்டு
விளையாடியது
உன்குடும்ப வாழ்வின் ஒத்திகை.

ஒத்திகை பார்ப்பதற்கென்றே
ஒவ்வொருவரின் வாழ்விலும்
ஒருவன் இருக்கிறான்...

என்றாவது ஒருநாள்
அவனுக்கு பஃபூன் வேஷமாவது
கிடைக்குமென்ற நம்பிக்கையில்...