முசுடு கட்டிய கூடு மாதிரி
உன் ஈர மனசால் பின்னப்பட்டது
என் வாழ்வு
உன் தாகத்தின் பிசினால்
குழைக்கப்பட்டது அதன் வலு
அதில் வாழும்
என் ஒவ்வொரு நிமிட வாழ்வும்
உன் ரத்ததின் வியர்வையால் கிடைத்தது..
எந்த அபிமானமென்று தெரியாமலே
என்னாலான அத்தனை சுமைகளையும்
நீ சந்தோஷமாகவே சுமந்துகொண்டிருக்கிறாய்
வயல்க்காட்டு புழுதியில்
மண்புழு நுழைவது மாதிரி
உன் உயிருக்குள்
நுழைந்துகொண்டே இருக்கிறேன்..
என்றேனும் ஒரு நாள்
என் நுழைதலின் வலி தாங்காமல்போனால்
என்ன செய்வாய் என்று கேட்கையில்
உன்னை விழுங்கி விட்டு
கொஞ்சம் தண்ணீர் குடித்துக்கொள்வேன்
என்று சொல்லி
மவ்னமாக சிரிக்கிறாய்..........
No comments:
Post a Comment